ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது பலாசா விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து ரயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நாளை தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் 53 மின்சார ரயில்கள் ரத்து
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திர மாநிலம், கண்டகப்பள்ளி அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அறிந்து வேதனையடைந்தேன். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் தற்போது ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து ரயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.