கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யாதீர்கள் என வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டணம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்குகளுக்கு வரும் பணத்தை நிர்வாக காரணங்களுக்காக வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிர்வாக காரணங்களுக்காக வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது. உதவித் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்திருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம். உதவி மையத்தில் அளிக்கப்படும் புகார்களின் அடிப்படியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்தால், 1100 என்ற முதல்வரின் உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து மொத்தம் 1.06 கோடி மகளிா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
விண்ணப்பதாரா்கள் அளித்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக கைப்பேசிக்கு வரும் 18-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.