ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி விபத்தில் நிக்கி, கைதான யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான டி.டி.எப்.வாசன் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் தனது விலை உயா்ந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தாா். அப்போது காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் தவறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்தாா். வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை சென்றாா். இவா் மீது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது உள்பட 5 பிரிவுகளின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பூங்கா நகா் பகுதியில் இருப்பதை அறிந்து அவரை பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜா்படுத்தினா். அவா் வரும் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அவரை புழல் சிறைக்கு காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.
இதையும் படிக்க: ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை!
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் டி.டி.எப்.வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் இன்று தள்ளுபடி செய்தார்.