திருவள்ளூர் நெடுஞ்சாலைக்காக சுமார் 1,783 மரங்களை வெட்டி அகற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்தின் தச்சூர் வரை 120 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நெடுஞ்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமலைராஜுபெட்டி மற்றும் நெடியம் காப்புக்காடுகள் வழியாக சித்தூரை சென்றடையும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக திருமலைராஜுபெட்டி பகுதியில் 3.4 ஹெக்டார் நிலம், நெடியம் காப்புக்காடு பகுதியில் 10.6 ஹெக்டார் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தப் பகுதிகளில் உள்ள 1,783 மரங்களை வெட்டுவதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விரைவில் இப்பகுதிகளில் உள்ள 1,783 மரங்களை வெட்டும் பணி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் தனது எழுத்துப்பூர்வ கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்த வனப்பகுதிகளை சுற்றிலும் கண்காணிக்க வேண்டிய பல்லி மற்றும் மான் வகைகள் உள்ளன. ஆனால், அழிந்துவரும் அல்லது பாதுகாக்க வேண்டிய பட்டியலில் உள்ள விலங்குகள் அல்லது தாவரங்கள் இல்லை. மேலும், விலங்குகள் பாதுகாப்பாக செல்வதற்கான பாதையை அமைக்க நெடுஞ்சாலை துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.