சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க கைலாச வாகன வீதி உலா நடைபெற்றது. இன்று ஜூன் 24-ம் தேதி சனிக்கிழமை இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
நாளை ஜூலை 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூன் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டிச் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணை செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.குருமூர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோயிலில் முழு நேரமும் அன்னதானம்!