பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, விவசாயிகள் கருப்புக் கொடி மற்றும் கருப்புப் பட்டை அணிந்து வாழப்பாடியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடியில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்.
வாழப்பாடியில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்.
Published on
Updated on
2 min read

வாழப்பாடி: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, விவசாயிகள் கருப்புக் கொடி மற்றும் கருப்புப் பட்டை அணிந்து வாழப்பாடியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்து தர வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். காலதாமதமின்றி, பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்தும், கருப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் வாழப்பாடி  வழக்குரைஞர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் கருப்புப் பட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த  பொருள்களுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த விலை கொடுத்து ஏமாற்றி வருகிறது. விவசாயிகளுக்கு பால் விலை கட்டுபடியாகாத காரணத்தினால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததால்,  தமிழக அரசு லிட்டருக்கு ரூ.3  மட்டும் உயர்த்தி கொடுத்தது. ஆனால் நாங்கள் ரூ. 10 விலை உயர்வு கேட்டிருந்தோம். 16-ஆம் தேதி வரை பால் விலை உயர்வுக்கு எங்களை அழைத்துப் பேசாவிட்டால், 17-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு கொள்முதல் நிலையங்களுக்கு பால்  வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளோம்.

தமிழகம் முழுவதும் 9,800 பால் கூட்டுறவு சங்க அமைப்பினரும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இன்று முதல் கருப்புக் கொடி ஏற்றி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, தமிழக அரசு பால் விலையை உயர்த்தி கொடுத்து பால் உற்பத்தியாளர், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com