தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை காரும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி ஆசிரியர் ஓட்டுநர் பலியாகினர்.
தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை, மகன் கிருபா பொன் பாண்டியன் (34). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வல்லம் அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த கிருபா பொன். பாண்டியன் நிகழ்விடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த மினி லாரி ஓட்டுநரான காரைக்கால் திரு நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாசமுத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த தாஸ் மகன் மேத்யூ (26), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மினி லாரி ஓட்டுநர் நெடுஞ்செழியன் பலியானார். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.