அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். மேலும் இச்சங்கத்தில் ஏராளமானோர் வைப்புத் தொகையாக பல கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 17க்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட, ரூ. 1.70 கோடி நிர்வாகத்தினர், மோசடி செய்து விட்டதாக கூறி, கூட்டுறவு சங்க முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
இந்த சங்கத்தில் எங்களிடம், வைப்புத் தொகைக்காக, ரூ.5 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை மொத்தம் ரூ. 1.70 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளோம். தற்போது சங்கத்திற்கு வந்து கேட்டால், பணம் செலுத்தியதற்கான எவ்வித ஆவணமும் இல்லை என்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சங்கத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறோம். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையில், சங்கச் செயலாளர் வடிவேல், பொதுமக்கள் வைப்புத் தொகை செலுத்தியதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அலுவலகத்தில் பணியாற்றும் அருந்ததி கலாமணி, பரணிதரன் ஜின்னா, பெரியசாமி ஆகியோர், நான் உடல்நிலை சரியில்லாத போது எனது கையெழுத்தை அவர்களே போட்டு முறையீடு செய்துள்ளனர் என நாளிதழில் வழக்குரைஞர் அறிக்கையளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சங்கச் செயலாளர் வடிவேல் குற்றச்சாட்டிய அலுவலக பணியாளர்களும் , மறுப்பு தெரிவித்து நாளிதழில் வழக்குரைஞர் அறிக்கை அளித்துள்ளனர். ஆகவே உண்மை நிலை ஆராய்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் செலுத்திய பணத்தை எங்களுக்கு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றனர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், சங்கச் செயலாளர் பொறுப்பு பாட்ஷா, முன்னாள் தலைவர் தனபால், ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சங்க செயலாளர் வடிவேல் விடுப்பில் உள்ளார். இது குறித்து கூட்டுறவு உயர் அலுவலர்களிடம் தெரியப்படுத்தி ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.