தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுவை மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இன்று நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தேர்தலில் முதல்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
மணிப்பூர், மேற்குவங்கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளைத் தவிர்த்து, வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் அடங்கிய இத்தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
முதல் முறை வாக்காளர்களும், முதியவர்களும் தவறாமல் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். கடும் கோடை வெப்பத்தினால் மதியம் 2 மணியளவில் சற்று வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பிறகு மாலையில் ஏராளமான மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தனர்.
முதல்கட்ட தேர்தல் களத்தில் 1,600க்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் வகையில் 16.63 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.
வரும் ஜூன் மாதம், தற்போதைய 17வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, 18வது மக்களவை தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.இதையடுத்து மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.