மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நிர்மலாதேவிக்கான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என நீதிபதி பகவதியம்மாள் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்ததாக, செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

உதவி பேராசிரியர் முருகன் - ஆய்வு மாணவர் கருப்பசாமி
உதவி பேராசிரியர் முருகன் - ஆய்வு மாணவர் கருப்பசாமி

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் 26ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராகாத்ததால் தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேராசிரியை நிர்மலாதேவி (56) மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். இதில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அப்போது நிர்மலாதேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும் தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார். சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் இன்றே தண்டனை விவரம் வழங்க வேண்டும் என முறையிட்டார்.

வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பிற்பகல் 2:50 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செவ்வாய்க்கிழமை தண்டனை விவரம் வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com