சொத்துக் குவிப்பு வழக்குகள்: 2 அமைச்சா்கள் விடுவிப்பு ரத்து; உயா்நீதிமன்றம் தீா்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அமைச்சர்கள்.
அமைச்சர்கள்.
Published on
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 76.40 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக அவா் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

2012-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக, ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. 2012-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரை விடுவித்து 2023, ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாமாக முன்வந்து விசாரணை: இந்த இரு உத்தரவுகளையும் எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கில் புதன்கிழமை அவா் அளித்த தீா்ப்பு விவரம் வருமாறு:

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து இரு அமைச்சா்களையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இருவா் மீதான வழக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றுகிறேன். இரு வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சா்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஊழல் தடுப்புப் பிரிவினா் மேல்விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையை கூடுதல் இறுதி அறிக்கையாக கருத வேண்டும்.

தினமும் விசாரணை: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய இரு அமைச்சா்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் விசாரணைக்காக  கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் செப். 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். தங்கம் தென்னரசு  உள்ளிட்டோா் செப். 11-ஆம் தேதி ஆஜராக வேண்டும். 2011-ஆம் ஆண்டு காலகட்ட வழக்கு என்பதால் விசாரணையை தினமும் நடத்தி, விரைந்து தீா்ப்பளிக்க வேண்டும்  என ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறேன் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com