
இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ ) மொத்த பங்களிப்பில் 15 சதவீதத்தைத் தமிழகம் கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் 1.4 கோடி மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு குறு தொழில் முனைவோர் அமைப்பை இன்று துவக்கி வைத்துப் பேசிய டிஆர்பி ராஜா, “மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ ) பங்களிக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபடும் நம் மாநிலத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் வரை அவர்கள் தலைமையில் செயல்படுகின்றன” என தெரிவித்தார்.
மேலும், “சிறு தொழில்களை ஆதரிக்கும் புதிய சிஐஐ திட்டத்தை தொடங்கும் இந்த நேரத்தில், புதிய தொழில்களையும், வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நமது அரசின் உறுதிப்பாட்டை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எம்.எஸ்.எம்.இ துறை மட்டும் மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் மற்றும் ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிக்கிறது” என்றும் கூறினார்.
சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய நகரங்களின் குறு தொழில் முனைவோர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுவார்கள் என சிஐஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
”அரசு மற்றும் தொழில்துறையின் முயற்சிகள் எம்எஸ்எம்இ துறையினருக்கு நல்ல சூழலை உருவாக்கியுள்ளன. எனினும், குறு தொழில் முனைவோர்களின் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளிலிருந்து மாறுபடுகின்றன.
டிவிஎஸ் மொபிலிட்டியின் ஆதரவுடன், நாங்கள் புதிதாக தொடங்கியுள்ள 'புதிய பயணம்: வளர்ச்சியை நோக்கி' திட்டத்தின் மூலம், 9 மாவட்டங்களில் இருந்து 1,000 குறு தொழில் முனைவோர்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம்' என்று சிஐஐ முன்னாள் தலைவர் தினேஷ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.