புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

அண்ணாமலையின் தகுதி என்ன? அவர் ஒரு விட்டில் பூச்சி! ஜெயக்குமார் பதிலடி

அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு..

News image

ஜெயக்குமார் (கோப்புப்படம்)

Updated On :27 ஆகஸ்ட் 2024, 1:43 pm IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“அண்ணாமலையின் தகுதி என்ன? மூன்று ஆண்டுகள்தான் அரசியலில் இருந்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி கிளைச் செயலாளராக தொடங்கி அமைச்சர், முதல்வரானவர். கொடி பிடிக்கும் தொண்டன்கூட கொடி கட்டிய அரசு காரில் வர முடியும் என்றால் அதிமுகவில்தான் முடியும்.

ஆனால், அண்ணாமலையின் நிலைமை 7 நாள்கள் மட்டுமே வாழும் விட்டில் பூச்சி போன்றது. இந்த அளவுக்குதான் அவருடைய நிலைமை. இதனை மறந்துவிட்டு பாரம்பரிய கட்சியும் 2026-இல் ஆட்சிக்கு வரும் மாபெரும் கட்சியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளதா?

கற்பனையில் மிதந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார் அண்ணாமலை. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு திமுக இதுவரை வாய்த்திறக்கவே இல்லை.

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது, அதிமுகவை தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவார்கள். இதுதான் வரலாறு. ஆட்சியைப் பிடிப்பது பாஜகவுக்கு பகல் கனவு போன்றது. கோட்டை பக்கம்கூட வரமுடியாது, ஒரு எம்எல்ஏ சீட் கூட அடுத்த முறை வெற்றி பெற முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அண்ணாமலை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை என்றும், மைக்கை பார்த்தால் வியாதி போல பேட்டிக் கொடுக்கத் தொடங்கிவிடுவார் என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள்? டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள், எந்த எம்எல்ஏவுக்கு மாதம் மாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான் தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனிடையே பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன், தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.