
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து மருத்துவ நிபுணருமான திவ்யா சத்யராஜ் தனது தாயாரின் உடல்நலன் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நடிகர் சத்யராஜின் மனைவி மஹேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக, கோமா நிலையில் உள்ளார். இதனையடுத்து அவருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எம்ஜிஆர் புகைப்படம் பக்கவாட்டில் அமர்ந்தபடி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “எனது அம்மாவின் உடல்நலப் பிரச்சினையால், கடந்த சில ஆண்டுகள் மிகுந்த சவாலான காலகட்டமாக அமைந்துவிட்டது. எங்கள் வீட்டிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, கோமா நிலையிலுள்ள எனது அம்மாவை கவனித்து வருகிறோம். இது கடினமான விஷயம். எனினும், எனது பேற்றோர்களைப் பாதுகாக்க விதியைகூட மாற்றியமைப்பேன்.
நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேதனை மிகுந்ததொரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவ நிபணராக இருப்பதால், என்னை முன்னோக்கிச் செல்ல உந்துசக்தியாக அது அமைந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகப் பிரிவினருக்கு சத்தான உணவுகள் வழங்க, தொண்டு நிறுவனம் ஒன்றை நான் தொடங்கியுள்ளேன். இச்செயல் மூலம், எனக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது, நான் இயல்பாக மாறவும் உதவியுள்ளது.
‘ரொம்பவும் பயப்பட வேண்டாம்’ என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன். இருள் சூழ்ந்த இந்த நெடிய சாலையில், சிறு வெளிச்சத்தை என்னால் பார்க்க முடிகிறது. அதை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு விரைவில் சென்றடைவேன், அப்போது அந்த நல்ல செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.