பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதாமல் மூன்றாவது மொழியை எடுத்து படித்து வருகின்றனர்.
பொதுத் தேர்வில் மூன்றாவதாக எடுக்கும் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மூன்றாவதாக எடுக்கப்படும் விருப்பப் பாடத்திலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும்.
ஆனால், விருப்ப பாடமாக மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். விருப்ப பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம்.
அடுத்த கல்வியாண்டில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.