சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று காலை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த திடீர் பயணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால், ஆளுநர் ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு பேரவையிலிருந்து வெளியேறினார். இது அன்றைய தினம் பேசுபொருளாகியிருந்தது.
இந்த நிலையில், தமிழக பேரவையில் இன்று வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திடிரென தில்லி புறப்பட்டுச் சென்றள்ளார். இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நான்கு நாள்கள் தில்லியில் தங்கும் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வியாழக்கிழமை தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், ஆளுநர் ரவியின் திடீர் தில்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.