தமிழ் கலாசாரத்தை உலகம் முழுக்க எடுத்துச் சென்றவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்று வருகிறது.
விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேடையில் வரவேற்புரையாற்றி பேசிய எல். முருகன், தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாசாரத்தை உலகம் முழுக்க எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. ஐநா அவையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார். இத்தகைய மோடியின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். வேண்டும் மோடி மீண்டும் மோடி எனக் குறிப்பிட்டு வரவேற்புரையாற்றினார்.