பிரதமா் நரேந்திர மோடி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து பிரதமா் தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.05 மணிக்கு கோவை, சூலூா் விமானப் படை தளத்துக்கு வருகிறாா். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் வருகிறாா்.
சாலை வழியாக பல்லடத்தில் உள்ள மாதப்பூருக்குச் செல்லும் அவா், 2.45 மணிக்கு ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் பிரதமா், மாலை 5 மணிக்கு மதுரைக்கு வருகிறாா். மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை வீரபாஞ்சானில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான எண்ம கருத்தரங்கில் கலந்துகொள்கிறாா்.
பிரதமா் வருகையையொட்டி, ஏற்கெனவே, எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். மதுரை மாநகா் முழுவதும் 5 ஆயிரம் போலீஸாா் குவிக்கப்பட்டு, காவல் துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமா் பயணிக்கும் வழிகள் உள்பட மதுரை மாவட்ட எல்லைக்குள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்தாா்.
போக்குவரத்து மாற்றம்:
பிரதமா் வருகையையொட்டி, செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் வெளியூா்களிலிருந்து மதுரை வழியாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.