திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் புதிய முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை புது தில்லியில் இருந்து திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
பிறகு, திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை இன்று நண்பகல் 12 மணிக்குத் திறந்து வைத்தார்.
இதையும் படிக்க.. சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!
புதிய முனையம் திறப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத் தொடங்கியதும், விழாவில் பங்கேற்றிருந்த பாஜகவினர், மோடி மோடி என முழக்கமிட்டனர். இதைக் கேட்டதும் திமுகவினரும் ஸ்டாலின் ஸ்டாலின் என முழக்கமிட்டனர். இதனால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று ஸ்டாலின் கூறியபோதும் பாஜகவினர் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் எனவும், சென்னை - பினாங், சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
மேலும், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் வலியுறுத்தினார்.