பென்னாகரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் நகரச் செயலாளர் பாரதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள இந்தியன் வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாரதி தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், பழங்குடி இன மக்கள் சங்கத்தின் சிறப்பு தலைவருமான ந. நஞ்சப்பன் கலந்துகொண்டு, மழை, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், மாநில அரசு கூறியுள்ள ரூ. 21,692 கோடி நிதியை முற்றிலுமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட நகரச் செயலாளர் பாரதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனை கண்ட கட்சியினர் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.