முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோப்பிலிருந்து...
கோப்பிலிருந்து...

முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 பிப்.21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கண்காணிக்கும் பணியில் தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் காரில் அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலரிடமும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிதிபாயிடமும் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாா் அளித்தாா்.

அதன்பேரில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், ராஜேஷ் தாஸ், அவரது உத்தரவுப்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி காா் சாவியை பறித்த ஒரு எஸ்.பி. ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீப்பளித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை குறிப்பிட்டு தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா பிறப்பித்த உத்தரவில், ராஜேஷ் தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி, கட்டாய ஓய்வில் அனுப்பும்படி குறிப்பிட்டார். அதில் ஏதாவது உடன்பாடு இல்லை என்றால் ராஜேஷ் தாஸ் அரசிடம் முறையிடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com