கோவை: பல்லடம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்த நேசபிரபு என்பவர் மீது மர்மக்கும்பல் சரமாரியாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வரிகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வதாக காவல்துறையின் அவசர எண் 100-க்கு தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்ட நிலையில், காவல்துறை அதிகாரியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து எனது வாழ்கை முடிந்தது. என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த காவல்துறை அதிகாரி காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு அலட்சியமாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க | கோவை: திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை!
இந்த நிலையில், செய்தியாளர் மர்ம நபர்களால் தாக்கப்படும் போது காவல்துறை அதிகாரியிடம் கதறும் ஆடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.