தேனி மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுருளி அருவியில் பறவைகளைக் காண்பதற்காக பிரத்யேக துறை தொடங்கப்பட்டுள்ளது.
பறவைகளைக் காண்பது என்பது மிகச் சிறந்த இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்குகளில் ஒன்று.
சுருளி அருவி, அடர்ந்த வனப்பகுதி என்பதால் பல்வேறு அரியவகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
பறவை ஆர்வலர்கள் இவற்றை காண்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் வசதியாக பறவைகள் காணல் துறை தொடங்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புலிகள் காப்பக துணை இயக்குநர் எஸ்.ஆனந்த் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழ் நாட்டில் முதன் முறையாக பறவைகள் காணல் துறை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியில் உள்ள பறவைகளை எந்தவித இடையூறுமின்றி பார்வையாளர்கள் ரசிக்கவும், அரிய வகை மரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் 8:00 மணிவரை இங்கு வந்து பறவைகளைக் கண்டு ரசிக்கலாம்.
இதையும் படிக்க: நாளை கூடுகிறது அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
இதில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. நுழைவு கட்டணம் ரூ 200 வசூலிக்கக்கப்படுகிறது.
காலை உணவு, தேநீர் மற்றும் பறவைகள் பற்றிய கையேடு ஆகியவை வழங்கப்படும். வழிகாட்டி ஒருவர் பறவைகள் குறித்து விளக்கம் தருவார். இதில் கலந்துகொள்ள இந்த எண்ணில் 8667471942 தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.