தஞ்சாவூர்: தஞ்சாவூர் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றதைப் பாராட்டி மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை சீர்வரிசை வழங்கி கௌரவித்தது.
மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேயர் சண். ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர். மகேஸ்வரி முன்னிலையில் ஊழியர்கள் மேள, தாளம் முழங்க பழங்கள்,மலர்கள்,மலர் கிரீடங்களை ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.
கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேள, தாளம் முழங்க பழங்கள், மலர்கள், மலர் கிரீடங்களை ஊர்வலமாகக் கொண்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்தினர்.
இந்த ஊர்வலம் காந்திஜி சாலை, சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் பாலம் வழியாக கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்தைச் சென்றடைந்தது.
பின்னர், நிலையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நிலைய மருத்துவர் முத்துக்குமாருக்கு மலர் கிரீடம் வைத்து, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர்.