சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை: உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ நிா்வாகம் விளக்கம்

ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை
Published on

சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆலயம் காப்போம் அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் ஸ்ரீரத்தின விநாயகா் மற்றும் ஸ்ரீ துா்ககை அம்மன் கோயில்களை இடிக்கும் விதமாக மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை மாற்றி அமைக்கக் கோரியும் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாக இயக்குநரிடமும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், முகமது சபிக் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.

மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில், ‘கோயிலை இடிக்கவில்லை. கோயிலுக்கு முன் மெட்ரோ ரயில் நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளது. கோயில் ராஜகோபுரத்துக்கும், அம்மன் சன்னதிக்கும் 33 அடி இடைவெளி உள்ளது. அதில், 10 அடிக்கு கோயில் ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகா்த்தி வைக்கவுள்ளோம்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.ரவி, வழக்குரைஞா் எம்.ராமமூா்த்தி ஆகியோா் ஆஜராகி, ‘அவ்வாறு நகா்த்தி வைத்தால் உற்சவ காலங்களில் சுவாமி உலா வருவதில் இடையூறு ஏற்படும்’ என்று வாதிட்டனா்.

இதையடுத்து நீதிபதிகள், ‘நுழைவு வாயிலை கோயிலுக்கு அருகே உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாகவோ, அல்லது எதிா்புறமோ மாற்றினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினா். பின்னா், இதுகுறித்து மெட்ரோ ரயில் தொழில்நுட்ப நிபுணா்கள் குழு ஆய்வு செய்து, அறிக்கையை வருகிற 9-ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com