/

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.

News image
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்.
Updated On :9 ஜூலை 2024, 8:00 am

DIN

ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.