சென்னை பாலியல் வழக்கில் முன்னுதாரணமாக மாறிய தீர்ப்பு!
சென்னை பாலியல் வழக்கில், போதிய சாட்சிகள் இல்லாத நிலையிலும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.


சென்னை: சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த பாலியல் சம்பவத்தில், காவல்துறை மெத்தனப் போக்கால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சிகள் இல்லாதபோதும், பாதிக்கப்பட்டவர் அளித்த சாட்சியம் ஒன்றை அடிப்படையாக வைத்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
சென்னையில் நடந்த பாலியல் சம்பவத்தில், கடந்த வாரம், விசாரணை நீதிமன்றம், நடுத்தர வயது பெண்ணை, அவரது 56 வயதான பக்கத்து வீட்டு நபர், 2021ஆம் ஆண்டு பொங்கல் நாளில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை பிறப்பித்துள்ளது.
சைதாப்பேட்டை, 17வது பெருமாநகர நீதிமன்ற நீதிபதி அனிதா ஆனந்த் பிறப்பித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், எந்த சந்தேகமும் இல்லாமல், திட்டவட்டமாக, தெளிவாக இருப்பதால், இதை மட்டுமே அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், குற்றவாளிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சூளைமேடு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், பக்கத்து வீட்டு நபர், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த நான்கு நாள்களுக்குப் பிறகுதான், பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையின்போது, புகார் அளிக்க கால தாமதமானது குறித்தும், குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படாதது குறித்தும் கேட்டுள்ளார்.
இது குறித்து நீதிபதி கூறுகையில், இந்த சமுதாயத்தில், ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதால், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் மரியாதையை சீர்குலைக்கும் என்றுதான் நினைக்க வைக்கிறது, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண், தான் பாதிக்கப்பட்டது குறித்து உடனடியாக வெளியே சொல்லிவிட முடியாத நிலையில்தான் சமுதாயம் வைத்திருக்கிறது என்றார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் கூறும் விஷயங்களில் அடிப்படையற்ற யூகங்களே இருப்பதாக நிரூபிக்க முயன்ற குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வாதத்தையும் நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் பல குறைபாடுகள் உள்ளன, குற்றவாளியை கைது செய்யக் கூட காவல் அதிகாரிகள் முன்வரவில்லை, குற்றம்சாட்டப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களிடம் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை கூட செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு விசாரணை, வேண்டுமென்றே குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது, காவல் உயர் அதிகாரிகள், இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.
குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ மற்றும் 506(ii)வது பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்றும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...