/

மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான அம்சங்கள்: அண்ணாமலை தகவல்

மத்திய பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கான அம்சங்கள் இடம்பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2024, 10:15 am

DIN

கோவை: தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த மக்களவையில் தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கான பாராட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், மின் கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் வரும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். மேலும் திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையையும் அண்ணாமலை வெளியிட்டு பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கின்றோம்.

தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்கள் மின்சார கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டு பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.

குறிப்பாக திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

வரும் பட்ஜெட்டில் கோவை ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அந்த துறையின் மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை சிபிஐ இடம் மாற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக ஆகும்போது திமுகவின் நிலைமையை மக்களே அறிந்து கொள்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து திருச்சியில் நடந்த மாநாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர் என அண்ணாமலை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.