/

தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்..

News image
அதிமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம்
Updated On :23 ஜூலை 2024, 7:38 am

DIN

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை வகித்துப் பேசியது:

மரக்காணத்தில் கடந்த ஆண்டில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். அப்போது தமிழக அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் நிகழாண்டில் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில் தமிழகத்தில் ஒரு யூனிட் கூட மின்சாரம் உற்பத்தியில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் தற்போது உச்சபட்சமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் குறித்து முதல்வருக்கு கவலையின்றி தனது மகனைத் துணை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார் சி.வி. சண்முகம்.

தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் பருப்பு, பாமாயில் வழங்கப்படாததைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலர் செஞ்சி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் சக்ரபாணி (வானூர்) அர்ஜுனன் (திண்டிவனம்), விழுப்புரம் நகரச்செயலர் இரா.பசுபதி மற்றும் கட்சியின் மாநில,மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள். கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.