
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு 50க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? என்பது பற்றியும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முதல்வருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரியவந்தவுடன் உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளகுறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.