கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராஜிநாமா! தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜிநாமா கடிதம் கொடுத்தார். மேலும், தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருச்சி: திருச்சி மாநகராட்சி கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மேயர் மு. அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜி. திவ்யா, ஆணையர் வே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அப்போது, மாநகராட்சி 60-வது வார்டு திமுக உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில், தனது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பல முறை விளக்கியும் மாநகராட்சி அவற்றை நிறைவேற்றித் தரவில்லை. எனவே நான் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக்கூறி, அவரது ராஜிநாமா கடிதத்தை மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன் ஆகியோரிடம் கொடுத்து விட்டு சென்றார்.

அவ்வாறு செல்லும் போது திமுக உறுப்பினரான எனக்கு இந்த நிலை என்றால், நான் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை எனக் கூறி கீழே இறங்கி சென்று காரில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

கோப்புப்படம்
கோவை, 3 மாவட்டங்களுக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

சக உறுப்பினர்களும் அக்கம் பக்கத்தினரும் அவரை தடுத்து மீட்டனர். திமுகவைச் சேர்ந்த மேயரிடமே திமுக உறுப்பினர் ராஜிநாமா கடிதத்தை கொடுத்து, தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் திருச்சி மாநகராட்சியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மேலும், அதிமுகவை சேர்ந்த 61-வது வார்டு உறுப்பினர் அம்பிகாபதி சபையில், போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எடப்பாடி கே. பழனிசாமி இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார் எனப் பேசினார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் அரசியல் பேசக்கூடாது எனக் கூறியதால், சபையை விட்டு வெளியேறுவதாக கூறி வெளிநடப்பு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com