நாம் தமிழர் கட்சியின் ஒதுக்கப்பட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த சின்னத்தில் தமிழகத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியிடம் இருந்து சின்னம் குறித்த கோரிக்கை மனு தாமதமாக பெறப்பட்டதால், கரும்பு விவசாயி சின்னத்தை கா்நாடகத்தில் உள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி வெள்ள நிவாரணப் பணிகளில் இருந்ததால் சின்னத்திற்கான கோரிக்கை மனுவை தாமதமாக அளித்ததாகவும், தமிழகத்தில் 7 சதவிகிதம் வாக்கு வைத்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் வழக்கமாக வழங்கப்படும் ’கரும்பு விவசாயி’ சின்னத்தை அளிக்கக் கோரி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடவுள்ளதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்திருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.