திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சியில் அனைமலைப்பட்டி செல்லும் சாலையில் தேவிக் குளம் உள்ளது.
இந்த குளத்தை சுற்றி ஆயக்கட்டுதாரர்கள் சிறுகுடி, நல்லகண்டம், அனைமலைப்பட்டி போன்றப் பகுதிகளில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் இயற்கை சீராகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா நடத்துவது என்று தீர்மானித்தனர்.
இதையொட்டி, இன்று அதிகாலை அங்குள்ள கன்னிமார் கோயிலில் பொங்கல் வைத்து, உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்து, மீன்பிடித் திருவிழாவை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் நத்தம், சிறுகுடி, பூசாரிபட்டி, நல்லகண்டம், அனைமலைப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகள், சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வலை, ஊத்தா போன்ற மீன்பிடி சாதனங்களுடன் இருசக்கர வாகனங்களில் வந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் கட்லா, விரால், ஜிலேபி, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர்.