இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பொருள்கள், பணம் பறிமுதல்!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை, 15 லட்சம் மதிப்புள்ள 12 ஐ-போன்கள், 2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 8,046 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்த கேள்விக்கு, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா? அரசியல் கட்சிகளின் குழப்பமா? அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனக் குறைவா என்று விசாரணை அறிக்கை கேட்டுள்ளோம்.
இதுவரை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தமாக சென்னையில் 52 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
10-க்கு மேற்பட்ட வாக்கு சாவடிகள் இருந்தால் அவையும் பதற்றமான வாக்கு சாவடியாக எடுத்துக் கொள்ளப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.