குடியாத்தம் அருகே பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட ஏரியில் மூழ்கி நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியை சேர்ந்த சரோஜா(45), அவரது மகள் லலிதா (22), அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காவியா(18) அவரது தங்கை ப்ரீத்தா (17) உள்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டனர்.
வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோயிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் 4 பெண்களும் இறங்கிய நிலையில், அதிலுள்ள சுழலில் சிக்கி, மூழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த அம்மா மகள் மற்றும் சகோதிரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.