கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்
Center-Center-Villupuram
Published on
Updated on
1 min read

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் விரைவில் அழிக்கப்படவிருப்பதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

மாஞ்சோலையை விட்டு விரைவில் வெளியேறவுள்ள பி.பி.டி.சி நிறுவனம் இத்தனை ஆண்டுகாலம் உழைத்த தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி தேயிலைத் தோட்டங்களை முற்று முழுதாக அழிக்க முனைகிறது. நான்கு தலைமுறைகளுக்கு முன் புலம்பெயர்ந்து வந்த அத்தொழிலாளர்கள் பலருக்கு சொந்த ஊர் எதுவென்றே தெரியாது. தோட்டத்தொழிலை தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத அம்மக்களுக்கு, வேறு காலநிலைகளில் பணிபுரிவதற்கு அவர்களின் உடல்நிலையும் ஒத்துழைப்பதில்லை. அதனால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

76,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் வெறும் 1000 ஏக்கரில் பயிரிடப்படும் தேயிலைத்தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உதகமண்டலம், வால்பாறை, மேகமலை, குன்னூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தேயிலைப் பயிரிடப்பட்டே வருகின்றன. மேலும், மலை வளத்தையும், வனப்பையும் பாதுகாப்பதில் மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மிகுந்த அக்கறைகொண்ட முன்னோடிகளாகவே உள்ளனர்.

சொகுசு விடுதிகள், தொழிற்சாலைகள், சுற்றுலா பயணிகள் கொட்டும் நெகிழி குப்பைகளால் மலைக்காடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி தேயிலைத்தோட்டங்களை அழிக்கத்துடிப்பது ஏன்? தேயிலைத்தோட்டங்களை அழித்து இயற்கை வளமிக்க மாஞ்சோலை மலைப்பகுதியை தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆகவே, நெடுங்காலமாக இருளடைந்துள்ள மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும், உரிய ஊதியம், பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர், கழிப்பறை, மருத்துவம், மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com