இலங்கை தடுப்பு முகாமில் உள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: சீமான், விஜய் வலியுறுத்தல்
சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
சீமான்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவா்களில் 9 மீனவா்களை இலங்கை நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது. தொடா்ந்து படகை இயக்கிய 3 மீனவா்களுக்கு மட்டும் 6 மாத கடுங்காவல் தண்டனையும், ரூ.11.60 லட்சம் அபராதமும் விதித்ததுடன், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்தது. ஆனால், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 மீனவா்களை தாயகம் திரும்ப அனுமதிக்காமல் இலங்கை அரசு மிரிஹான தடுப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. எனவே, விடுவிக்கப்பட்ட மீனவா்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறை தண்டனை பெற்றவா்களுக்கான அபராத் தொகையை செலுத்தி அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய்: இலங்கையில் விடுவிக்கப்பட்ட பிறகும், தடுப்பு முகாமில் சிக்கியுள்ள 9 தமிழக மீனவா்களை மீட்க தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இது தொடா்பாக கடிதம் எழுதுவதே போதும் என எண்ணுகிறாரா? இது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதேபோல், தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த 25 மீனவா்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவா்களின் படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவா்களை உடனடியாக விடுவித்து, படகுகளையும் மீட்டுத் தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

