
சென்னை: இரவு முழுக்க மிதமான மழை, பகலில் அவ்வப்போது லேசான மழை போன்ற நிலையே வரும் ஞாயிறு வரை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.
மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்து, அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இரவிலிருந்து இன்று காலை வரை சென்னையில் தொடர்ந்து நல்ல மழை பெய்தது. சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் பரவலாக நல்ல மழை பதிவாகியிருக்கிறது. இதே நிலைதான் வரும் ஞாயிறு வரை நீடிக்கும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நாள்தோறும் மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயரும்.
மிகவும் அழகான பருவமழைக் காலத்தில், தினமும் காலையில் எழுந்ததும் மழை பெய்வதைக் கண்டு ரசிக்கலாம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பகல் நேரத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுடன் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.