சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டடத்தின் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் மொத்தம் 10 தளங்கள் உள்ள நிலையில், முதல் தளத்தில் விவசாயத் துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த தளத்தில் தரையில் உள்ள டைல்ஸில் சத்தத்துடன் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறினர். பிற தளங்களில் உள்ள ஊழியர்களுக்கும் 'கட்டடத்தில் விரிசல்' என வதந்தி பரவிய நிலையில் அனைத்து ஊழியர்களும் வெளியேறினர்.
இதன்பின்னர் தகவலறிந்த காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிக்க | பிரியங்கா வேட்புமனு தாக்கலின் போது வெளியே அனுப்பப்பட்டாரா கார்கே?
பின்னர் இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று காவல்துறையினர் கூறினர். பொதுப்பணித் துறை இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதன்பேரில் ஊழியர்கள் பணிக்குத் திரும்புகின்றனர்.
சேதம் அடைந்த பகுதியை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது 'சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் தளத்தில் இயங்கி வரும் விவசாயத் துறை அலுவலகத்தின் தரையில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இது சாதாரணமாக ஏற்பட்டிருக்கும் விரிசல்தான். அதனைச் சரிசெய்ய பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தோம். கட்டடம் உறுதியாகத்தான் இருக்கிறது. அதனால் ஊழியர்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைவரும் பணிக்குத் திரும்பலாம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.