தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்படுமா என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படும் என்று உள்துறை அமித் ஷா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், கூட்டணிக் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”அதிமுக - பாஜக கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு உறுதியானது என்பது கிடையாது. சென்னைக்கு வருகைதந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அன்றைய நாளே செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை அறிவித்தார்கள். அதனால் நீண்ட இழுபறி என்பதற்கு இடமில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அந்த கூட்டணிக்கு தலைவராக இபிஎஸ் இருப்பார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து எங்களின் அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்.
திமுக பெண்களுக்கு எதிரான கட்சி. பொன்முடி பேசியதற்கு முதல்வர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். இதுமாதிரி ஒரு கட்சி இருக்க வேண்டுமே என்று 2026 இல் அனைவரும் முடிவு செய்ய வேண்டும்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறார்.
அம்பேத்கரின் நினைவிடங்கள் பராமரிக்கப்படாமல் இருந்தன. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு புதுப்பிக்கப்பட்டு புனிததலமாக அறிவிக்கப்பட்டது. அம்பேத்கரின் சிலை கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழகம் மீண்டுவர மக்கள் 2026 இல் தீர்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.