
காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை துவக்கி வைத்தார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை, ஆகையால் பேச முடியவில்லை என மேடையில் கூறினார் துரைமுருகன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா, இதன் பின்னணி குறித்து கேட்டதற்கு,
பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.
பிகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து கேட்டதற்கு,
அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்மூருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்கு வந்திருக்கிறார்கள், இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை? ஏனென்றால் பிகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என நீக்கி விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் செய்ய முடியாது. ஆகையினால் இது கிரானிக்கள் பிராப்ளம், இதைத் தலைவர்கள் தான் அணுக வேண்டும் என்றார்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.