/

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

கோவையில் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு

News image

பிரதிப் படம் - ENS

Updated On :6 ஆகஸ்ட் 2025, 11:55 am IST

கோவையில் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர், காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, நடத்தப்பட்ட விசாரணையில், அறிவொளி ராஜன் என்பவர், தன்னை சிலர் துரத்துவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை இரவு (ஆகஸ்ட் 5) காவல் நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்ட நிலையில், அறிவொளி ராஜன் சடலமாக இருந்துள்ளார். காவல் நிலையத்தில் ஒருவரின் இந்த மர்ம மரணமானது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரவுப் பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த மர்ம மரணம் குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டவர் மனநலம் பாதித்தவர் என்று அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இது லாக்-அப் மரணம் அல்ல; காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை.

மேலும், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, காவல் நிலையத்துக்கு அறிவொளி ராஜன் வருகைதந்த நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக காவல் அதிகாரிகள் காட்டியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.