

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், கடந்த 24 மணிநேரத்துக்கு மேலாக சென்னை, திருவள்ளூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த புயல் சின்னமானது அடுத்த சில மணிநேரங்கள் சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டு, பின்னர் இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் திருவள்ளூருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சில நிமிடங்களில் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை (டிச. 3) மேற்கு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.