

கோவையில், சாலை நடுவே உள்ள மிகப்பெரிய பள்ளத்தை, பலரும் இது கோவையின் கூமாபட்டி என தங்களது வேதனையை கிண்டலாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் கூமாபட்டி பற்றிய விடியோ ஒன்று வைரலாகி, பலரும் கூமாபட்டியை இணையதளத்தில் தேடும் நிலை ஏற்பட்டது. அந்த வசனம் போல, இது கோவையின் கூமாபட்டிங்கோ என சாலையின் நடுவே மரண குழியை அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் கிண்டலடித்துச் சென்றாலும், அது சற்று கவலைத்தரக்கூடியதாகவே உள்ளது.
நல்ல ஸ்மார்ட் சிட்டிங்கோ, நம்ம கோவைங்கோ என கொங்கு மொழியில் கூமாபட்டியைப் போன்று கிண்டல் அடித்துச் செல்கின்றனர் இளைஞர்கள்.
கோவை நகரின் நடுவே மரண குழி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுதப்பட்டு வருகிறது.
மாநகரின் மையப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வாகனங்களில் கடந்து செல்லும் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழியை கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள் மற்றும் அவர்களது அலட்சியத்தால் நாள்தோறும் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
கோவை டவுன்ஹால் - லங்கா கார்ணர் இணைக்கும் சாலையின் நடுவே அளவெடுத்து செய்தது போல, 3 அடி சுற்றளவுடன் மூன்று அடி ஆழம் கொண்ட குழி ஒன்று வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறது.
இது மாநகரின் முக்கிய சாலை என்பதால் மாவட்ட ஆட்சியர் முதல் மாநகராட்சி கமிஷனர் வரை முக்கிய பிரமுகர்கள் கடந்து செல்லும் பாதையாக உள்ளது. மேலும் பள்ளி கூடம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை அனைத்தையும் இணைக்கும் பிரதான சாலை இது.
இந்த சாலையின் நடுவே ஏற்பட்டு உள்ள அபாய குழியில் நிறைந்து நிற்கும் நீரில் தெரியாமல் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரண பள்ளமாக இருக்கும் என்று புதிதாக வருவோர் அதில் வாகனத்தை இறக்கினால் விபத்து நேரிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது.
முக்கிய நபர்கள் கடந்து செல்லும் மாநகரின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்தக் குழி எப்படி? யார் கண்ணிலும் பாடமால் உள்ளது என்பதே அப்பகுதி மக்களின் ஆச்சரியமான கேள்விகளில் ஒன்று.
இது குறித்து அப்பகுதியில் நடந்து செல்லுவோர் கூறும் போது, இது பாதள சாக்கடை தண்ணீர் , அவசரமாக ஓட்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை ஏற்றி இறக்குவதால் தண்ணீர் தெறித்து நடந்து செல்வோர் மீது விழுகிறது. மேலும் அந்த நீரில் துர்நாற்றம் வீசுகிறது.
அதன் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. உயிர் பலி ஏற்படும் முன் இந்த சாலைக்குழியினை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.