
திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதரரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையில், காவல் உதவி ஆய்வாளர்களும் பெண்ணின் பெற்றோருமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது கவினின் பெற்றோர் புகார் அளித்ததால் முதல் தகவல் அறிக்கையில் அவர்கள் பெயரும் சேர்க்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை(CB.CID)க்கு மாற்றப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையின் பின்னணி..
சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இவர்களிடமும், இவர்களது பெண்ணிடமும் விசாரணை நடத்தியிருந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.