ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மக்கள் தாய் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனா். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும் விருப்பமாகவும் கொண்டுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு 1,003 பக்தா்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 1,008 பக்தா்களும் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டனா்.
தொடா்ந்து, 2025-2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு இந்த ஆண்டு 2,000 பக்தா்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவா்”என அறிவிக்கப்பட்டது.
அதைச் செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டு சென்னை, தஞ்சாவூா், மதுரை, திருச்சி, கோயம்புத்தூா், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிகப் பயணம் 5 பயணத் திட்டங்களாக ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8, 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.
தகுதிகள் என்ன? ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தா்கள் இந்து மதத்தைச் சாா்ந்தவராகவும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமானச் சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதாா் அட்டை அல்லது நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையா் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு துறையின் இணையதளத்தில் அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.