
சென்னைக்கு இந்த மே மாதம் மிகவும் தனித்துவமான மாதம் என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்.
மே 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்தே தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மழை பெய்த நிலையில், சென்னையில் பரவலாக செவ்வாய்க்கிழமை இரவும் மழை பெய்து மண்ணைக் குளிர்வித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் வரை கடும் வெய்யிலில் தவித்துவந்த சென்னை மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கோடை வெப்பம் உச்சம் தொடும் நாள்களில் மிகச் சிறப்பானதொரு நாள் இன்று. வரும் நாள்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் நாள்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. நேற்றைய நாளை விட இன்று வெப்பம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று தெற்கு மற்றும் உள் மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு மிக தனித்துவமான மாதமாக இந்த மே மாதம் அமைந்துள்ளது.
இதனை அவரே விவரித்தும் உள்ளார். அதாவது, இந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் இரண்டு நாள்கள் மழை பெய்திருக்கிறது. இதுவே மிகவும் அரிதிலும் அரிதானது. கடந்த காலங்களிலும் அதாவது 2004, 2010, 2016, 2022ஆம் ஆண்டுகளில் கூட கடலில் உண்டான புயல் சின்னம் காரணமாகவே மழை பெய்திருக்கிறது.
சென்னையில் அதுவும் மே மாதத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்வது, முதல் வாரத்திலேயே இரண்டு நாள்கள் மழை என்பதெல்லாம் வரலாற்றில் இல்லாதது. இந்த மே மாதம் இதோடு நின்றுபோகப்போவதில்லை. வரும் நாள்களிலும் சென்னையில் நல்ல மழையும், இடியும் மின்னலும் இருக்கிறது என்று சென்னை மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியை அளித்திருக்கிறார்.