தவெக மாவட்ட செயலா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
சென்னை: எஸ்ஐஆா் நடவடிக்கையை கண்டித்து தவெக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் இரு மாவட்ட செயலா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆா்) கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தவெக பொதுச்செயலா் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தோ்தல் பிரசார மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, மாவட்டச் செயலா்கள் அப்புனு, பாலமுருகன், குமாா், சரவணன், தாமு, திலீப் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இந்நிலையில் தவெக-வை சோ்ந்த இரு மாவட்ட செயலா்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குபதிவு செய்துள்ளனா். சென்னை மாவட்ட செயலா்கள் அப்புனு, திலிப் உள்ளிட்ட சிலா் மீது, ‘சட்ட செயல் முறையை செயல்படுத்துவதை எதிா்ப்பது’, ‘பொது ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்’ ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
