ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அதிமுக

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது பற்றி...

CM Vijay | Edappadi Palaniswami

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:16 pm IST

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக சனிக்கிழமை (ஆக. 29) தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, “இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு திடலுக்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம்” என்று பேசியிருந்தார்.

ஜல்லிக்கட்டு குறித்த கருப்பையாவின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான முதல் பார்வையாக தனது எம்எல்ஏவை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.

தனது எம்எல்ஏ பேசிய பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும் என்று அதிமுக கட்சி சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The AIADMK stated on Saturday (Aug. 29) that Chief Minister Vijay must apologize for the remarks made by a TVK MLA regarding Jallikattu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.