தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தரப்பு வாதம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

நமது நிருபர்

தமிழக சட்டப்பேரவைக்கு 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரமில்லை என திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வாதிடப்பட்டது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்: சைதை துரைசாமி தரப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என கூறப்படுவதற்கான சிறிய ஆதாரம் கூட கிடையாது. மேலும், குற்றச்சாட்டை முன்வைத்த நபர்கள் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன.

ஏனெனில், ஒரு சாட்சி, முதலில் ஒரு பகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாக தெரிவித்தார். அவரே மறுமுறை கூறும் போது தான் அந்த பகுதியில் இல்லை என கூறியுள்ளார்.

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக கூறும் சாட்சிகளை எவ்வாறு நம்ப முடியும்? பணம் வாங்கிய ஒருவரைக் கூட சைதை துரைசாமி தரப்பு சாட்சியாக முன்னிறுத்தவில்லை. மனுதாரர் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே ஒழிய, அவற்றை நிரூபிக்கத் தவறியுள்ளனர் என கபில் சிபல் வாதிட்டார்.

இதையடுத்து, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதே நாளில் அனைத்து வாதங்களையும் நிறைவு செய்யுமாறு இரு தரப்பையும் அறிவுறுத்தினர்.

பின்னணி: 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி, திமுக வேட்பாளர் மு.க. ஸ்டாலினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, ஸ்டாலின் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து, முறைகேடுகள் செய்து வென்றதாகவும் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த தேர்தல் மனுவை 2017-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சைதை துரைசாமி 11.7.2017-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com